கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள்





                       கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள் சென்ற வெள்ளியன்று (5-09-2014) நடைபெற்றது.    

                                     ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையாசியை பத்திரம்மாள் தலைமை தாங்கி அன்றாட வாழ்வில்  கணிதத்தின் அவசியம் பற்றிக் கூறி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கணித  ஆசிரியர் திருமுருகன் 'பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கணித  மனப்பான்மையின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார். பல்வேறு  கணித அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி ஆசிரியைகள்  முனியம்மாள், அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் பேசினர்.

             முதல் நிகழ்வாக ஏழாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி 11ஆல் பெருக்க ஓர் எளிய முறையை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஆறாம் வகுப்பு  மாணவன் சுனில்குமார் 3 X 3 மாயச்சதுரம் அமைக்கும் முறையை  விளக்கினார். எட்டாம் வகுப்பு மாணவர் லோகேஸ்வரன் ஒரு பிறைநிலாவைப் போன்ற உருவத்தை காட்டி இரு ஈர்க்குச்சிகளின்  உதவியுடன் அதை 6 பாகங்களாக பிரிக்க முடியுமா என சவால் விடவும்,  மாணவர்கள் பலர் ஆர்வத்தோடு முயற்சி செய்து தோற்றனர்.இறுதியில்  அவரே விடையை செய்துகாட்டியவுடன் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  அடுத்து ஆறாம் வகுப்பு மாணவி ஸ்ரீநி தொடர்ச்சியாக சில எண்களை எழுதி  அடுத்து வரும் எண் எது என கேட்டார். அதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்  கிரண்குமார் சரியாகச் சொல்லி பரிசை வென்றார்.

               3 ,7 மற்றும் 9 ஆகிய எண்களின் வாய்ப்பாட்டை 9 கட்டங்கள் கொண்ட   அட்டவணை அமைத்து , எட்டாம் வகுப்பு மாணவர் தினேஷ்குமார் எளிதாக  செய்து காட்டியது ஆசிரியர்களையும் ஆச்சரியப்படுத்தியது. ஆறாம் வகுப்பு  மாணவர் கோகுல் ஒரு வடிவத்தை கரும்பலகையில் வரைந்து காட்டி அதை கையை எடுக்காமலும் வந்த கோட்டின் மேல் திரும்பி வராமலும் வரைய  வேண்டும் என சவால் விட்டார். அதனை எட்டாம் வகுப்பு மாணவர் சுபாஷ் முறியடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.எட்டாம் வகுப்பு மாணவி  மதுமிதா ஐஸ்குச்சிகளைக் கொண்டு பல்வேறு புதிர்களை உருவாக்கி  வழங்கினார்.

                 மாணவர்களது நிகழ்ச்சிகளை ஏழாம் வகுப்பு மாணவி கவிஸ்ரீ தொகுத்து வழங்கினார்.பொதுவாக மாணவர்களின் கணித ஆர்வத்தை  வளர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்தன.இறுதியில் எட்டாம் வகுப்பு  மாணவர் ஜவஹர் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.







0 comments:

Post a Comment